Monday 9 September 2013

இச்சாதாரி அரவங்கள்.

1)பச்சை இருள் அப்பிக்கிடக்குமொரு
பகல் காட்டில்
உச்சித்துளைகளின் வழியாய்
சொரியும் சூரியனில்
நனைந்தபடி கிடக்கிறேன் நிர்வாணியாய்…

எழுந்து நின்றாடி இயங்கி முயங்கும்
இச்சாதாரி அரவங்களின் அரவம்

சிற்றலகு பிளந்து நாத்துடிக்கும்
பிஞ்சுக் குஞ்சுகளின் கீச்சொலி நீங்காது
இரைசேர்க்கும் பெண் புள்.

குட்டிகளைத் தன்னோடு ஒட்டிக்கொண்டு
உச்சிக்கிளை வளைத்தாடும் மந்தி

வளைத்ததில் சிதறி பின்
வடிவமாய் அடைசேரும் தேனீ

இன்னபிறவும் சேர்ந்து
கொசுக்களாய்ப் பிடுங்குகின்றன
என் நிர்வாணத்தை.




2)வானம் பெயர்ந்து விழுந்ததென
ஒருவன் வதந்தி கிளப்பினான் .

பெரிய பெரிய சாக்குகளோடு
ஊரே திரண்டது ...

நட்ச்சத்திரங்களை சேகரிக்க .

பொறுக்க வந்தவர்களை
அவர்களது சாக்குகளிலேயே
அள்ளிக்கொண்டு போனான்
வதந்தியாளன் .




3)வெள்ளித்திரையின்
ராட்சத மார்களை
இமையுதடுகளால்
சப்பி அருந்திய
காட்சிப்பால்
கசிந்து கசிந்து பிசுக்கேறிய
கண்களைத்திற .....

.சக,

விலக்கப்பட்ட கனியின்
விதைதான் என்றாலும்
நீ அங்கீகரிக்கப்பட்டவன் .